முன்னாள் சபாநாயகருக்கு இலங்கையின் உயரிய விருது
இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியான தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ‘சிறிலங்காபிமன்யா’ என்ற பட்டம் வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரியவுக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காபிமன்யா
தற்போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராகவும், முன்பு சபாநாயகராகவும் இருந்த 82 வயதான அவர், இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் எட்டாவது நபர் ஆவார்.
முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாச 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்தக் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டதுடன், டபிள்யூ டி அமரதேவ 2017 ஆம் ஆண்டு இதனைப் பெற்றுக்கொண்டார்.
சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான ஏ.டி.ஆரியரத்னவுக்கு 2007 இல் சிறிலங்காபிமன்யா என்ற பட்டம் வழங்கப்பட்டதுடன், இந்தக் கௌரவத்தைப் பெற்று வாழும் ஒரேயொருவரும் ஆவார்.
பெப்ரவரி 3ஆம் திகதி அதிபர் செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வின் போது அதிபரிடமிருந்து கரு ஜயசூரிய இந்தப் பட்டத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கு மிகச்சிறந்த மற்றும் சிறந்த சேவையை வழங்கிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.