இரண்டு துண்டுகளாக பிளவடையும் கண்டம் - உருவாகும் புதிய சமுத்திரம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
ஆபிரிக்கக் கண்டம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும் இதனால் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் உட்பகுதியிலிருந்து எழும் வெப்பக் குழம்பு (Magma), நிலத்தின் மேலோட்டை வலுவிழக்கச் செய்து அதனை உடைப்பதாலேயே ஆபிரிக்காவின் புவியியல் வரைபடம் மெல்ல மெல்ல மாறி வருகிறதென ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த நிலவியல் மாற்றம் மிகவும் மெதுவாக நடந்தாலும், கண்டத்தகடுகள் நகர்வதால் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வர்ஜீனியா டெக் (Virginia Tech) பல்கலைக்கழக புவியியலாளர் டி. சாரா ஸ்டாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
டெக்டோனிக் தகடுகள்
பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகள் (Tectonic Plates) எனப்படும் புவித் தகடுகளால் ஆனது.

ஆபிரிக்காவில் உள்ள கிழக்கு ஆபிரிக்க பிளவு (East African Rift - EAR) பகுதியில், 'சோமாலிய தகடு' மற்றும் 'நுபிய தகடு' ஆகிய இரண்டும் ஒன்றையொன்று விட்டு விலகிச் செல்கின்றன.
இந்த தகடுகள் ஆண்டுக்கு சில மில்லிமீற்றர்கள் என்ற அளவிலேயே நகர்கின்றன.
எனவே, ஆபிரிக்கக் கண்டம் முழுமையாகப் பிரிந்து புதிய சமுத்திரம் உருவாக இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நீர் உட்புகுந்து புதிய சமுத்திரம்
எத்தியோப்பியாவின் அபார் (Afar) பகுதியில் மூன்று தகடுகள் சந்திக்கும் இடம் தனித்துவமானதாகும்.

இங்கு நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழே செல்வதால், காலப்போக்கில் கடல் நீர் உட்புகுந்து புதிய சமுத்திரம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிளவு செயல்முறை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனவும் இது செங்கடலில் இருந்து மொசாம்பிக் வரை சுமார் 2,174 மைல்கள் தூரம் நீண்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |