வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு
ஈரானின் புதிய உயர் தலைவரான மொஜ்தபா கமேனி, தனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில் சமீபத்தில் எழுத்து வடிவில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது தந்தையான அலி கமேனி முன்னர் நியமித்த அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது பதவிகளில் தொடர வேண்டும் என்றும், பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, மொஜ்தபா முன்னாள் புரட்சிகர காவல் படைத்தலைவரான மெசென் ரெசாய்வை இராணுவ ஆலோசகராக நியமித்துள்ளார்.
பரவும் வதந்திகள்
இந்த நிலையில், புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டதற்கு பிறகு அவர் நேரடியாக காணொளியில் தோன்றாமல் மீண்டும் அறிக்கை வெளியிட்டது சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளது.

மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அறிக்கைகளில், அவர் கால், கை மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும், கூடவே ஒரு காலை இழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சில ஊடகங்கள் அவர் கோமா நிலையில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன.
மேலும், சிகிச்சைக்காக ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், ஈரான் அதிகாரிகள் இந்த வதந்திகளை மறுத்து, அவர் பாதுகாப்பாக உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து தப்பிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்கிய போது, கமேனி குடும்பம் தங்கியிருந்த வளாகம் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Image Credit: WSJ
அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்ததால் மொஜ்தபா கமேனி உயிர் தப்பியதாகவும், அவருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது தெளிவான தகவல் இல்லை. சில தகவல்களில், அவர் லவிசான் பகுதியில் உள்ள பாதுகாப்பான பதுங்கு குழியில் இருப்பதாகவும், மற்ற தகவல்களில் ரஷ்யாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் அரசு அவர் பாதுகாப்பாக உள்ளார் என்று தெரிவித்தாலும், அவர் பொதுமக்கள் முன் தோன்றாதது காரணமாக அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து சந்தேகங்கள் தொடர்ந்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |