கண்டி தனியார் வங்கியில் மோசடி: ஒன்பது அதிகாரிகள் அதிரடி கைது
கண்டி தலதா வீதியிலுள்ள தனியார் வங்கி கிளை ஒன்றின் ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடன் விண்ணப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்களைத் தயாரித்தமை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடன் ஆவணங்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்டவர்களில் ஆறு ஆண் அதிகாரிகளும் மூன்று பெண் அதிகாரிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2012 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மோசடியான கடன் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக 2022 ஒகஸ்ட் 28 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
அந்தக் காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இடைப்பட்ட சந்தேகநபர்கள்
இந்தநிலையில் 32 முதல் 58 வயதுக்கு இடைப்பட்ட இச்சந்தேகநபர்கள் கண்டி, பேராதனை, கட்டுகஸ்தோட்டை, புசல்லாவை, ஹீரஸ்ஸகலை, குருநாகல், பிலிமத்தலாவை, ஹலோலுவ மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று (13-05-2026) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 500,000 ரூபாய் பிணை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |