மின் துண்டிப்பு - மெழுகுவர்த்தி இல்லை மீண்டும் கற்காலத்திற்கு செல்லவுள்ள மக்கள்
மெழுகுவர்த்தி உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வாங்குவதற்கு மெழுகுவர்த்தி கூட இல்லாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால்(Ranjan Jayalal) தெரிவித்தார்.
டொலர் நெருக்கடியால் சீனாவில் இருந்து மெழுகு இறக்குமதியும் முடங்கியுள்ளதாகவும், மெழுகுவர்த்தி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
1982 ஆம் ஆண்டு வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மெழுகு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், அந்த வருடத்தின் பின்னர் மெழுகு இறக்குமதி செய்வதற்கு கூட்டுத்தாபனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருளில் மூழ்கியுள்ள மக்களுக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தவறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
"மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, மக்கள் மெழுகுவர்த்தியை ஏற்ற நினைத்தார்கள். இப்போது மெழுகுவர்த்தி தயாரிக்கப்படவில்லை அல்லது மெழுகு இறக்குமதி செய்யப்படவில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், நம் மக்கள் நெருப்பில் வாழ வேண்டியிருக்கும். உண்மையில் இந்த ஆட்சியாளர்களுடன் வாழ்வது கற்காலத்தில் வாழ்வது போன்றது. நாம் இரண்டு கற்களைத் தேய்த்து, ஒரு வெளிச்சத்தைக் கண்டுபிடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.