அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை
இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினை பொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைப் நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுகர்வுப் பரிசோதனை
அத்துடன், நாடாளுமன்றத்தின் 41 வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை (Fuel Efficiency Test) சுற்றுநிருப விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2016 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின்படி, ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனைக்குப் பின்னரும் 12 மாதங்கள் கழித்து அல்லது 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு அல்லது எஞ்சின் தொடர்பான முக்கிய பழுதுபார்ப்புக்குப் பிறகு எது முதலில் வருகிறதோ, அதன் பிறகு மீண்டும் எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
ஆனால் இப்பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சேவைக்காலம்
நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 12 வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 5 அதிகாரிகள் கொண்ட குழுவினால் கடந்த ஆண்டின் மே 28 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (Duty-free Vehicle Permits) வழங்குவது தொடர்பான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட நிர்வாகப் பதவியொன்றில் 6 ஆண்டுகள் தீவிர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்யாத மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறைப்படியான அனுமதி தொடர்பான ஆவணங்கள் தணிக்கைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |