வடகொரியா அதிரடி - அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குரூஸ் ஏவுகணை
வடகொரியா, தற்போது தனது கடற்படை பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன சோய் ஹியோன் எனும் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன.
ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ரோடோங் சின்முன் தெரிவித்துள்ளது.
சாம்பல் நிறப் புகை
அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட 2 அதிநவீன ‘குரூஸ்’ ஏவுகணைகளும், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் 3 ஏவுகணைகளும் ஏவப்பட்டன.
குரூஸ் ஏவுகணைகள் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்து மேற்கு கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தனது கடற்படையின் அணு ஆயுதத் திறனை எல்லையற்ற வகையில் விரிவாக்கம் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
5,000 டன் எடை கொண்ட 'சோ ஹியோன்' என்ற போர்க்கப்பலிலிருந்து சாம்பல் நிறப் புகையை வெளியிட்டபடி வளைந்து சென்ற எறிகணை ஒன்றை, கிம் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கப்பல் துறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களை, கொரிய மத்திய செய்தி நிறுவனம் என்ற மற்றொரு அரசு ஊடகம் வெளியிட்டது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |