வடக்கு அபிவிருத்தியில் பாரிய மோசடி!! திரைமறைவில் சீனா, இந்தியா?
ஏ-9 வீதி மற்றும் வடக்கிற்கான தொடருந்து மார்க்க சீரமைப்புப் பணிகளின் போது அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நான்கு மடங்கு அதிக தொகை செலவிடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டி, இதில் மிகப்பெரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த போதிலும் அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனவும், வேறு வழியின்றி தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“இந்தியாவின் இல்கோன் என்ற நிறுவனமே வடக்கிற்கான புகையிரத பாதையை அமைத்திருந்தது. அவர்கள் இந்த திட்டத்தை நாம் கூறிய விலையை விட 4 மடங்கு அதிகமான விலையில் தான் மேற்கொண்டனர். நாம் இதை செய்திருந்தால் 4 இல் ஒரு பங்கில் செய்திருக்கலாம்.
இதே போல் ஏ-9 வீதியை சீரமைக்கும் நிறுவனத்தின் பிரதான பொறியியலாளர் என்னிடம் ஒரு விடயத்தை தெரிவித்தார். ஏ-9 வீதியயை சீரமைக்க பொறுப்பேற்றுள்ள நிறுவனம் கெட்டிக் என்ற ஒரு நிறுவனம் எனவும் அது சீனாவின் விமான நிறுவனமாகும் எனவும், அந்த நிறுவனம் இந்த திட்டத்தை மேலும் 2 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அன்று நாட்டில் செய்யப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் சென்ற செலவுகள் தொடர்பாக நான் 3, 4 மாதங்களுக்கு தேடினேன். நான் மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் கூறியது அனைத்துமே உண்மையென நிரூபனமானது.
இது பற்றி நான் மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்தேன். அவரை சென்று சந்தித்து இது பற்றி கூறினேன். அவர் அன்று என்னை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இவற்றை எழுதி அனுப்ப முடியாதா எனக் கேட்டார். நான் அவர் கேட்டதை போன்று தமிழ் பத்திரமொன்றை தயாரித்து அனுப்பினேன்.
ஆனால் எந்தவொரு விசாரணையும் இடம்பெறவில்லை. எனக்கும் அமைச்சரவை பொறுப்புக்களை செய்யவிடவில்லை. இதை அறிந்துகொண்டு நானாகவே விலகி வந்துவிட்டேன்” என்றார்.