ஆளுநரின் பாரபட்சமான செயற்பாடு : யாழ்.மாநகரசபையில் அமளி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வுகளுக்கு மாநகர வரிக்குறைப்பை வழங்குவதற்கு மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றிய போதும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதனை வழங்க முடியாது என நிராகரித்துள்ளதாக யாழ் மாநகர சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
இன்று(14) வியாழக்கிழமை யாழ் மாநகர சபை மாதாந்த அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் இடம்பெற்ற நிலையில் இவ்வாறு வாத பிரதிவாதம் இடம்பெற்றது.
கல்வி நிகழ்வுகளுக்கு வரிக் குறைப்பு வழங்க மறுக்கும் ஆளுநர்
அமர்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர், யாழ் மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரிகள் பங்குபற்றிய பெருந்துடுப்பாட்டப் போட்டி யாழ் இந்துக் கல்லூரி ஏற்பாடு செய்த இசை நிகழ்வு மற்றும் யாழ் மருத்துவ பீடம் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு மாநகர சபையால் அறவிடப்படும் வரியை குறைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்காக சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் அதனை குறைப்பதற்கு சபை தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் அவ்வாறு வழங்க முடியாது சபையின் வருமானத்தை குறைப்பதை அனுபவிக்க முடியாது என அனுமதி தரவில்லை.
ஆனால் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்த புது வருட நிகழ்வுக்கு மைதான குத்தகையை மாநகர சபைக்கு வழங்காது ஆளுநர் தன்னிச்சையாக அனுமதியை வழங்கியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாநகரசபை தீர்மானங்களை மீறி வடமாகாண ஆளுநர் அரசாங்கத்தின் எடுபிடியாக சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்ததை ஏற்க முடியாது.
தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாக மீறினால் மக்கள் சபை எதற்கு
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களால் ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடியாது என மாநகர சபை தீர்மானத்தை மீறி உத்தரவு போடும் ஆளுநர் எவ்வாறு இராணுவ நிகழ்வுக்கு எவ்விதவிதமான பணமும் அறவிடாது அனுமதி வழங்க முடியும். உயரிய சபையில் முதல்வர் முன்னிலையில் எடுக்கப்படும் தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாக மீறுவார் ஆயின் மக்கள் சபை எதற்கு என கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கீடு செய்த முதல்வர் மதிவதனி சில விடயங்கள் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட வேண்டும் என்பது சட்டம்.ஆளுநர் எதைச் சொல்லுகிறாரோ அதை நடைமுறைப்படுத்தினோம் என்றார்.
இதன்போது எழுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றும் ஒரு உறுப்பினர், ஆளுநர் எதைச் சொன்னாலும் செய்யலாம் என்றால் நீங்கள் எதற்கு இந்த சபை எதற்கு கலைத்துவிட்டு ஆளுநர் பார்க்கட்டும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் சபையில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுமை தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்த நிலையில் சபை அமைதி நிலையை அடைந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |