சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு - நீக்கப்பட்டது தடை (படம்)
2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் (2022) தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்து விதிக்கப்பட்ட காலக்கெடு மே 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு நேற்று நள்ளிரவு முதல் (17) பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்ட க.பொ.த. சாதாரண தர பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவது, மே 20 நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் செய்யப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
குறித்த நிலைமை தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள், பரீட்சார்த்திகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, பரீட்சார்த்திகளுக்கு குறிப்பிட்ட வகையில் நியாயத்தை நிலைநாட்டும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் மே 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (2022) தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடைவிதிக்கப்படும் குறித்த காலப்பகுதியில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துதல், ஒழுங்குபடுத்தல். பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல். குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல் குறித்த பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குவதாகவோ, அது போன்ற மாதிரி வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும். -
குறித்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவர். - எவரேனுமொருவர் அல்லது நிறுவனம், குறித்த உத்தரவுகளை ஏதேனுமொரு வகையில் மீறுதல் அல்லது செயற்படும் நிலையில், அது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, காவல் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார் -
காவல்துறை தலைமையகம் - 011 2421111 - காவல்துறை அவசர தொலைபேசி - 119 - பரீட்சைகள் திணைக்கள உடனடி தொலைபேசி - 1911 - பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குபடுத்தல் மற்றும் பெறுபேறுகள் பிரிவு - 011 2784208/ 011 2784537 - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் - 011 2785211/ 011 2785212