வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத சுமார் 100,000 வாகன இலக்கத்தகடுகள் நாரஹேன்பிட்டா தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்களது இலக்கத்தகடுகளை வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான நடைமுறையாக, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டாவில் உள்ள பிரதான அலுவலகத்திற்குச் சென்று தங்களது தகடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை
அதேவேளை, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கிளைகளுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலுவையில் உள்ள இலக்கத்தகடுகள் தாமதமின்றி உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள திணைக்களம், அவ்வாறு செய்யத் தவறினால் எதிர்காலத்தில் தேவையற்ற நிர்வாகத் தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகளுக்கு, பொதுமக்கள் 011‑2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு எண் பிரிவைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |