தென்னிலங்கையில் பதற்றநிலை..! காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு (காணொளி)
இரண்டாம் இணைப்பு
கொழும்பு, புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்ட பேரணி கோட்டை புகையிரத நிலையத்தை அடைவதை தடுக்கும் வண்ணமே காவல்துறையினர் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பாதையை விட்டு விலகுமாறு வலியுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடையை மீறி முன்னேற முற்பட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், பாதுகாப்பு தரப்பும் ஆர்ப்பாட்டக்காரர்களும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை - புறக்கோட்டை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு
கொழும்பு - மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் அம்பேபுஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு வந்துள்ள மக்கள் மருதானையில் ஒன்றுகூடியுள்ள நிலையில் தற்போது காலிமுகத்திடல் பகுதிக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு சூழலில் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொழும்பின் முக்கிய பகுதிகளில் வீதித்தடைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சில வீதிகளை முடக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.