இ.போ.ச பிரதிநிதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வடக்கு ஆளுநர்! (Photos)
இ.போ.ச பிரதிநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்து, நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் எனக் கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyakarajah) கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருவதனால் , அவர்கள் அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே தாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
அதனால் புதிய பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.
இந்நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இன்றைய தினம் தனது அலுவலகத்திற்கு இ.போ.ச பிரதிநிதிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து இருந்தார். அதன் போது , யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் அழைக்கப்பட்டு இருந்தார்.
குறித்த கூட்டத்தில், இ.போ.ச பிரதிநிதிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட மறுப்பு தெரிவித்தனர்.
அதனை அடுத்து ஆளுநர்" மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. தனி நபர்,குழுக்களின் சுயலாபத்திற்காக அதனை தேடுவாரற்று விட முடியாது" எனக் கூறி நல்லதொரு முடிவாக எடுங்கள் என கூறி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் முதல்வரும் வெளியேறியுள்ளார். அதனால் இ.போ.ச பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தினுள் உட்கார்ந்து இருந்து தமக்குள் பேசி வருகின்றனர்.