திசைக்காட்டியின் மே தின பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகளால் எழுந்த சர்ச்சை
தேசிய மக்கள் சக்தியின் (NPP) மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கடந்த முதலாம் (01.05.2025) திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தி
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மே தின பேரணியில் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் , நெடுஞ்சாலையில் நின்று உணவருந்தி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெலிப்பண்ண பகுதிக்கு அருகில் குறித்த பேருந்துகளின் சாரதிகள் வீதியில் பேருந்தை நிறுத்தி மதிய உணவு எடுப்பதைக் காட்டும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பேருந்துகள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

