சிறகுகள் அமையத்தின் 9ஆவது கிராமிய நூலகம் திறந்து வைப்பு!
சிறகுகள் அமையத்தின் படிப்பகம் செயற்றிட்டத்தினூடாக ஒன்பதாவது கிராம நூலகம் நுவரெலியாவில் ஹைபொரஸ்ட் இலக்கம் - 01 கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நூலகத்திற்கு "செந்தழிம்" நூலகம் எனும் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
நூலக உருவாக்கப் பணிகள் ஹைபொரஸ்ட் இலக்கம் 01 இளைஞர் அமைப்பினருடன் இணைந்து சிறகுகள் அமையம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 3 மணியளவில் சிறப்பு அதிதிகளை வரவேற்று சிறார்களின் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பித்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்பினர், அரச சார்பற்ற நிறுவனத்தினர், சமூக நலன் விரும்பிகள் மற்றும் அதிகமான ஊர் மக்களும் கலந்துக்கொண்டனர்.
சுகாதார முன்னேற்பாடுகளோடு ஆரம்பித்த இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் மனம் நெகிழும் படியாக அமைந்திருந்தது.
லயன் குடியிருப்பில் ஓர் அறையில் ஒரு நூலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலகம் எதிர்காலத்தில் கல்வி ரீதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
குறித்த நூலகத்திற்கான நூல்கள் சிறகுகள் புத்தக சேகரிப்பினூடாக பெறப்பட்டவை என்பதும் மகிழ்வான ஒரு செய்தி.
நீங்களும் இது போன்ற நூலகங்களை அமைக்க குறைந்தது ஒரு புத்தகமாவது தந்துதவி சிறகுகளின் கல்விக்கான இலட்சிய பயணத்தில் இணைந்து பயணிக்கலாம்.



