3 பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு
நுவரெலியா காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா பீட்று தோட்டத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து தர்மராஜ் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட மக்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் இரத்தம் கசிந்திருப்பது தெரியவந்துள்ளதுடன், குறித்த நபர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டுக்குச் சென்றதாக உயிரிழந்தவரின் மனைவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
சடலம் நுவரெலியா நீதவானின் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்றுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின் சடலம் சட்ட வைத்தியர் ஊடான பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.