50 ரூபாய்க்கு தலைவர் பிரபாகரன் குறித்த தமிழ் திரைப்படம் விற்பனை! இருவருக்கு ஏற்பட்ட நிலை
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைப் பயணம் குறித்த, இந்திய தமிழ் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்ததாக நுவரெலியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் வணிக வளாகத்தை நடத்தி வந்த நபரும், அவரது நண்பருமே இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபருக்குச் சொந்தமான கடையில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கைப் பயணம் குறித்த படத்தை 50 ரூபாய்க்கு பென்டிரைவ்களில் போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியாவில் உள்ள ஹாவாஎலிய பகுதியில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய இருவர் மீதும், பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வீடியோக்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.