இலங்கையில் சுற்றித்திரியும் பயங்கரவாதிகள்!! விகாரை, கோவில் என எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம்?
அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு வழங்குவதே. அந்தவகையில் கடந்த ஆட்சியில் அது தவற விடப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டாண்டு பூர்த்தி நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கமும் அதில் முழுமையான கவனம் செலுத்தவில்லை என்பதற்காகவே பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றம் சுமத்தப்படுகின்றன.
பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு அதற்கான காரணங்களை கண்டறிவதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் சமூகத்தின் நிழலில் மறைந்துள்ளனர்.
அவர்கள் மூலமாக மேலும் குண்டு வெடிப்புகள் இந்த நாட்டில் இடம்பெறலாம். அது இந்து கோயிலாக இருக்கட்டும் பௌத்த விகாரையாக இருக்கட்டும் எங்கு வேண்டுமென்றாலும் இடம்பெறலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
அது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோன்று ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதா?
அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக நாம் குற்றத்தடுப்பு விசாரணை பொலிசாரிடம் அதற்கான பொறுப்பை (நேற்று) காலை முறைப்பாடாக கையளித்துள்ளோம் என்றும் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்தார்.