அடுத்துவரும் நாட்கள் ஆபத்தானவை!! பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் இன்னும் ஒரு சில வாரங்களில் விகாரமடைந்த ஒமிக்ரோன் வைரஸ் தொற்றானது ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக மாற்றமடையும் என தொற்று நோயியில் விசேட நிபுணர் பேராசிரியர் போல் ஹண்டர் எச்சரித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் துரிதமாக அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், டெல்டாவை விட ஒமிக்ரோன் வைரஸ் தொற்றானது முந்திச் செல்லும் எனவும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரசானது எவ்வாறு பரவும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக தொற்று நோயியில் விசேட நிபுணர் பேராசிரியர் போல் ஹண்டர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் டெல்டா வைரசை விஞ்சிச் செல்லும் ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதாகவும், அடுத்த சில வாரங்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக ஒமிக்ரோன் மாறும் எனவும் அவர் கணிப்பிட்டுள்ளார்.
புதிய விகாரமடைந்த ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரித்தானியா முழுவதும் இருப்பார்கள் எனவும் பேராசிரியர் போல் ஹண்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதுவரை 336 பேர் மாத்திரமே புதிய விகாரமடைந்த வைரஸ் தொற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே பிரித்தானியாவிற்கு பயணமாவதற்கு 48 மணித்தியாலத்திற்குள் கொரோனா தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை 04 மணி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அத்துடன் இன்று முதல் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட நைஜிரியாவை சிவப்பு பயண எச்சரிக்கை உள்ள நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா உள்வாங்கியுள்ளது.
எனினும் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையானது ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவலில் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும் என பேராசிரியர் போல் ஹண்டர் கூறியுள்ளார்.
இதனிடையே ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவலை கையாளும் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தாமதமாக செயற்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளதுடன், தமது அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.