மீண்டும் தலையெடுக்கும் மலேரியா : வடக்கு மாகாணத்தில் ஒருவர் மரணம்
கடந்த ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 5 பேர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் ஒருவர் மரணடைந்துள்ளார். இவ்வாண்டும் இது வரை ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளார் என மலேரியா தடை இயக்கத்தின் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் கே. நிசாந்தினி தெரிவித்தார்.
வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (25.04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக மலேரியா தினம்
உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. மலேரியா உலக அளவில் இன்றும் முக்கிய பொது சுகாதார பிரச்சனையாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டு உலக அளவில் 282 மில்லியன் நோய் தாக்கங்களும், 6 இலட்சம் மரணங்களும் பதிவாகியுள்ளன. இதில் 95 வீதமான மரணங்கள் ஆபிரிக்க பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்கா, தென்னாசியா, தென் அமெரிக்கா பகுதிகளில் இன்னும் மலேரியா தொற்று காணப்படுகிறது.

இலங்கையிலும் முன்னர் மலேரியா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1934, 1935 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவற்றில் மரணங்களும் ஏற்பட்டன. தடுக்கும் நோக்கில் மலேரியா ஒழிப்பு திட்டம் 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு மிகக் குறைந்த நோய் தாக்கமே இனங்காணப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ச்சியான கண்காணிப்பு, கவனக் குறைவு காரணமாக மீண்டும் 1968 இல் நோய் பரம்பல் ஏற்பட்டது.
முற்று முழுதாக ஒழிக்கப்பட்ட மலேரியா நோய்
2012 ஆம் ஆண்டு இலங்கையில் மலேரியா நோய் தாக்கம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனம் 2016 ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக இலங்கைக்கு சான்றிதழ் அளித்தது. இருந்த போதிலும் வெளிநாட்டு பயணங்கள், மலேரியா நோய் நுளம்புகளின் பெருக்கங்கள் மூலம் மீண்டும் மலேரியா நோய் ஏற்படும் அபாயமுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு இலங்கையில் 42 மலேரியா நோய் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். அவற்றில் ஒரு மரணமும் பதிவாகியது. 2026 ஆம் ஆண்டு இன்று வரை 10 பேர் நோய் தாக்கங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வட மாகாணத்தைப் பொறுத்தவரை வவுனியாவில் நோய் தாக்கங்களுடன் எவரும் கண்டு பிடிக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் 2025 இல் 5 நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அதில் ஒரு மரணமும் பதிவாகியது. அவர் வெளிநாட்டில் நோய் தொற்றுக்குள்ளாகி வருகை தந்தவராவார். 2026 இல் ஒருவர் கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்டுள்ளார்.
மக்களின் பங்களிப்பு அவசியம்
இந்த நோய் தாக்கங்களும், தொற்றுக்களும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் மூலமே ஏற்பட்டிருந்தது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், வெளிநாடுகளில இருந்து வருபவர்கள், யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தகம் நோக்கி செல்பவர்கள் ஆகியோர் தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும்.

அவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் ஒரு வாரத்திறகு முன்பு மலேரியா தடை இயக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மலேரியா தடை இயக்கத்தை தொடர்பு கொண்டு இரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே தடுக்க முடியும். இது குணமாக்க கூடிய ஒரு நோய்.
நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ஆண்டில் எமது தலைப்பு ''மலேரியாவை முடிவுக்கு கொண்டு வர முனைவோம். இப்போது என்னால் முடியும். இப்போது நாம் செய்ய வேண்டும். பயணிகளின் மலேரியாவை தடுக்கவும் பரிசோதிக்கவும் கவனத்தில் கொண்டு வருவோம்'' என்பதாகும். எனவே அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்