தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு : காயமடைந்த நபர் உயிரிழப்பு
புதிய இணைப்பு
கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றிரவு (15) 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கல்கிஸ்ஸ - படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
விசாரணைகள் ஆரம்பம்
சம்பவத்தையடுத்து, விசேட அதிரடிப்படை (stf)அதிகாரிகள் மற்றும் தெஹிவளை காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |