போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் நிலைப்பாடு! வெளியாகும் அடுத்தடுத்த நகர்வுகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாகிஸ்தானை ஒரு தூதுவராகக் கொண்டு ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டத் தொடர்புகளின் போது அது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
இதன் தொடர்ச்சியாக, முன்னதாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக, ஈரான் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் குறித்த விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் தூதுக்குழு ஒன்று இன்று தெஹ்ரான் வர வாய்ப்புள்ளதாகவும் பாகேய் கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பாகேய், ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதி வழியிலானது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல்
மேலும், தனது தேவைகளின் அடிப்படையில் யுரேனியம் செறிவூட்டலைத் தொடர ஈரானுக்கு உரிமை உண்டு என்றும், இருப்பினும் செறிவூட்டலின் வகை மற்றும் அளவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது பெப்ரவரி 26 அன்று, அணுசக்தித் திட்டம் குறித்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |