பெண்ணொருவரிடமிருந்து ரூ. 60 இலட்சம் மோசடி! இருவர் அதிரடி கைது
நிகழ்நிலை முதலீட்டு மோசடி மூலம் பெண் ஒருவரிடமிருந்து ரூ. 60 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை ஏமாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்நிலை வணிக முயற்சியின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என நம்பவைத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வடமேற்கு மாகாண குற்றப்புலனாய்வு துறையின் கணினி குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.
மேலதிக விசாரணை
விசாரணைகளின் படி, ரூ. 6,105,600 தொகை சந்தேகநபர்களில் ஒருவரின் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது.

அதில் ரூ. 1,500,000 தொகை மோசடியாகப் பெறப்பட்டு, மோசடியின் ஒரு பகுதியாக பிறருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில், கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரையும், குலியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |