வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை - கோட்டாபயவின் அதிரடி உத்தரவு
எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி வரையில் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இந்த தடை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
அரச தலைவரின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபம் ஒன்றின் மூலம் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது.
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து சிறந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் நோக்கில் அரச தலைவர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரபூர்வமாகவோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.