கல்வித்துறையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி -நாட்டை விட்டு வெளியேறும் ஆசிரியர்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை சம்பளமற்ற விடுமுறையில் சென்றவர்கள் உட்பட 5,000 ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.
தற்போது கல்வித்துறையில் ஆசிரியர்கள் தொழிலை விட்டு வெளியேறி வெளிநாடு செல்வதற்கான போக்கு அதிகரித்து காணப்படுவதாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கல்வித் துறையை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்யும்

எனினும், இந்த நிலைமையை திறம்பட கையாளாவிட்டால், அது எதிர்காலத்தில் கல்வித் துறையை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்யும் என்று அவர் எச்சரித்தார்.
தொழிலை விட்டு வெளியேறிய பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பவர்களாக இருந்ததாக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
கல்விக்கு சாவு மணி

இவ்வாறான பாடங்களுக்கு இருக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் வெளிநாடு செல்ல விரும்பி இராஜினாமா செய்துள்ளமையால் கிராமப்புற பாடசாலைகளில் இந்த நிலைமை வலுவாக உணரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுத் துறைக்கு புதிய ஆட்களை எடுக்க வேண்டாம் என்று அரசு எடுத்த முடிவை அடுத்து, ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவெடுப்பது, இங்குள்ள கல்விக்கு சாவு மணி அடிப்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதாக தெரிவித்த அவர் , கல்வி அமைச்சு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறினால், அது நாட்டின் மாணவர்களுக்கு ஒரு பாரிய அடியாக அமையும் எனத் தெரிவித்தார்.