மாபெரும் பேரெழுச்சி பேரணி தொடர்பில் தமிழர் தரப்புக்கு சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம் பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தடைகளை பிறப்பிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கிடையாது. இம்முறை பலமான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்குவதாக கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமைத்துவமாக கொண்ட தரப்பினர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி செல்கிறார்கள்.
வெறுக்கத்தக்க பேச்சுக்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் எதுவும் மாறப்போவதில்லை. நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் அநீதி இழைக்கப்படவில்லை.
குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர பேரணி சென்று தீர்வை பெற முடியாது என்பதை தமிழ் தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்