பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதிக்கு மீண்டும் பூட்டு!
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மூடப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி மக்களின் காணியூடாக தற்காலிக பாதையூடாகவே செல்லும் வகையில் திறக்கப்பட்டதுடன் நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது.
தற்காலிகமாக திறக்கப்பட்டநிரந்தர பாதை
எனினும் சில நாட்களில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்ததால் மக்கள் ஆலயத்துக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப் பினர் இளங்குமரனிடமும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து இராணுவத்தினருடன் கலந்துரையாடியதையடுத்து நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.இதையடுத்து ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் வீதியால் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருவிழா முடிந்த நிலையில் நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.
இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு
இதேவேளை பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஆலயத் திருவிழாவிற்காக தற்காலிக திறக்கப்பட்ட குறித்த பாதையானது நேற்றையதினம் மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை எமது செய்தியாளர் தொடர்புகொண்டு வினவியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை
கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது. குறித்த பாதையானது நிரந்தரமாக திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும். மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |