இஸ்ரேலின் கோர முகம்..! காசாவில் இரு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படத்திற்கு விருது
காசா (Gaza) யுத்தத்தில் இரண்டு கைகளையும் இழந்த பாலஸ்தீன சிறுவனின் புகைப்படத்திற்கு கிடைத்த விருது சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இஸ்ரேலின் (Israel) கோர முகத்தை வெளிக்கொணரும் இரு கைகளையும் இழந்த இந்த சிறுவனின் படம் 2025ம் ஆண்டின் சிறந்த உலக பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 புகைப்படங்களில் இருந்து இந்த புகைப்படம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பலதலைமுறைகளின் மீது தாக்கம்
காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் 51,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா தெரிவிக்கிறது.
காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் பலஸ்தீனத்தை சேர்ந்த மகமூத் அஜோர் (9) என்ற சிறுவன் 2 கைகளையும் இழந்தான்.
கைகளை இழந்த சிறுவனின் புகைப்படத்தை கட்டாரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சமர் அபு எலோப் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக எடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இந்த ஆண்டின் மிக சிறந்த பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் ஒரு சிறுவனின் கதையை சொல்லும் அதேவேளை பலதலைமுறைகளின் மீது தாக்கம் செலுத்தப்போகும் பரந்துபட்ட யுத்தம் குறித்தும் பேசுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
