பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளை அகற்ற அதிரடி வேட்டை
பிரான்சின் தலைநகர் பரிஸில் போர்ட் து லா வில்லத் பகுதியில் கடந்த ஒருவருட காலமாக சிறிய குடில்களில் தங்கியிருந்த சட்டவிரோத குடியேறிகள் இன்று காலை காவல்துறையின் பாரிய நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானாவின் உத்தரவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் பங்கெடுத்திருந்தனர்.
அதிகாலை வேளையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் அகற்றப்பட்ட குடியேறிகளில் சிலர் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான குடியேறல்
இன்று அகற்றப்பட்ட குடியேறிகள் வேறு புதிய இடத்தில் சட்டவிரேதமாக தங்கமுடியாத வகையில் நடவடிக்கை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.
இன்று அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களில் காவல்துறையால் தேடப்படும் நபர்கள் இருந்தால் அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும், அதேபோல சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களும் நாடுகடத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.