அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு - அரச தரப்பை மேற்கோள்காட்டி தகவல்
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டென அரச தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
20ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த தினத்தில் நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில்,
ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஓராண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடாத்தப்படவுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் பொதுஜன முன்னணியிடம் இருக்கும் போதே தேர்தலை நடாத்தவும், இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தேர்தல்களை அரசாங்கம் அடுத்தடுத்து நடாத்த திட்டமிட்டுள்ளது.
தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசித்துள்ளது.
எவ்வாறெனினும், அரச தலைவருக்கான தேர்தல் முன்கூட்டி நடாத்தப்படாது எனவும், 2024ஆம் ஆண்டில் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
