முற்றாக முடங்கிய நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதிகள்!!
பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு, நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு சேவைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த குழுவினர் பத்தரமுல்லையில் இருந்து வீதியை மறித்து சேவைகளை இடைநிறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவசர கணினி பராமரிப்பு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து கிளை அலுவலகங்களிலும் இன்று ஒரு நாள் சாதாரண சேவை கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.