நாட்டில் புத்தாண்டுக்கு முன்னர் ஏற்படப்போகும் மாற்றம்! எதிர்க்கட்சி எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கை காரணமாகவே பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சின் கீழ் இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி(கட்டுப்பாட்டு ) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், சீனி இறக்குமதி வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு வருமானம் இல்லாமல் போயிருப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து நாங்கள் தெரிவித்து வருகின்றோம்.
அதன் பின்னர் நிதி அமைச்சினால் நாடாளுமன்ற நிதி குழுவுக்கு அறிவித்திருந்த அறிவிப்பில் சீனி வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு 15.9பில்லியன் ரூபா வருமானம் இல்லாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் யாரும் அதுதொடர்பில் வாய் திறக்கவில்லை. ஆனால் சீனி இறக்குதி வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படவில்லை என தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் வாய் திறக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஜனாதிபதியை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர்.
சீனி இறக்குமதியால் ஆயிரத்தி 300கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனி இறக்குமதிகான வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு கிடைக்காமல் போன 1600கோடி ரூபா யாருக்கு சென்றது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
இதுதொடர்பாக தடயவியல் கணக்கு விசாரணை ஒன்றை மேற்கொள்வதன் மூலமே இதன் உண்மையான நஷ்டத்தை கண்டு பிடிக்க முடியும்.
அதன் மூலமே இதன் திருடர்கள் யார் என்பதை தேடிக்கொள்ள முடியும். சீனி இறக்குமதிக்கான வரி குறைப்பு செய்த பின்னர் எமது வர்த்தக சந்தையில் சீனி ஒருகிலோ 113 ரூபா முதல் 135ரூபா வரை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளை பிரதேசத்தில் பஸ் விபத்து ஏற்பட்டதில் 15பேர்வரை உயிரிழந்திருக்கின்றனர். அதனால் தற்போது அரசாங்கம் அதனை காரணம் காட்டி வாகனங்களின் டயர்களை பரிசோதித்து, டயர் தேய்வடைந்திருந்தால் அதற்கு தண்டம் அறவிடும் நடவடிக்கையை ஆரம்பிதிருக்கின்றது.
அரசாங்கம் கடந்த காலத்தில் ஒருசில வகையான டயர்களை இறக்குமதி செய்ய தடைவிதித்திருந்தது. அதனால் சில வாகனங்களுக்கு தேவையான டயர் சந்தையில் விற்பனைக்கு இல்லை.
எனவே அரசாங்கத்துக்கு தற்போது வருமானம் இல்லாததனால் தற்போது சாதாரண வாகன உரிமையாளர்களிடமும் தண்டம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.