கோட்டாபய பதவி விலகல்: ஜூலை 20ல் அரச தலைவர் பதவிக்கான தேர்தல்! வெளியாகிய தகவல்
ஜூலை 20ம் திகதி தேர்தல்
அரச தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய பதவி விலகி இரண்டு நாட்களுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இலங்கைக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டம்
குறித்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குமார் வெல்கம, டிலான் பெரேரா திரான் அலஸ், டலஸ் அழகப்பெரும, மனோ கணேசன், லக்ஷமன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன், உதய கம்மன்பில உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.