தொடர் தோல்வியை சந்திக்கும் கே.கே.ஆர் அணியில் பத்திரன
நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் 2026 தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பின்னணியில் இன்றைய போட்டியில் இலங்கை வீரரான வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நடந்த ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பத்திரனவின் வருகை
முன்னாதாக 2026 ரி20 உலகக் கோப்பையின் போது அவருக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், பத்திரன இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கீழ் சிகிச்சை பெற்று வந்ததோடு பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான தொடக்கத்தை சந்தித்துள்ள பின்னணியில் பத்திரனவின் வருகை அணிக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டின்போது பெய்த மழையால் குறித்த போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில் இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கப்பெற்றது.
அஜின்கியா ரகானே தலைமையிலான கே.கே.ஆர் அணியில், இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒன்றில்கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு அணி தள்ளப்பட்டுள்ளது.
மோசமான சாதனை
இந்த தொடர் தோல்விகள், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி படைத்திருந்த மிக மோசமான சாதனை ஒன்றை கே.கே.ஆர் முறியடிக்குமோ என்ற அச்சத்தை இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிக்கு எதிராக தங்களது தோல்வியை முடிவுக்குக் கொண்டுவர அணியினர் முனைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2026 தொடரின் 28வது போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையேயான ஆட்டம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (19.04.2026) மதியம் 3.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இன்றைய போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் வலிமையான தொடக்க ஜோடியின் காரணமாக, ராஜஸ்தான் அணி இந்த மோதலில் உறுதியான வெற்றி வாய்ப்பு கொண்ட அணியாகக் களமிறங்குகிறது.
அணியிலிருந்து நீக்கப்படலாம்
மேலும், இந்த ஆண்டுப் போட்டிகளிலேயே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகச் சிறந்த ஒன்றாக அவர்களின் அணியை மேலும் பலப்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில் பத்திரன நேற்று முழு உடற் தகுதியுடன் அணியில் இணைவதற்காக கொல்கத்தாவிற்கு வந்தடைந்த நிலையில், இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை ஐ.பி.எல் 2026 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரோவ்மன் பவல், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக அணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஐ.பி.எலில் 32 போட்டிகளில் பத்திரன , பெரும்பாலும் கடினமான ஓவர்களை வீசி, 47 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[PFPI7HK ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |