பாதுகாப்பு குறித்து அச்சம்..! பிற்போடப்பட்ட இலங்கை - பாகிஸ்தான் போட்டிகள்
இலங்கை (Srilanka) மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
நாடு திரும்புவதற்கு கோரிக்கை
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பை பாகிஸ்தான் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை குழாமின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் பணிக்குழாமினர் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தது.
அதன் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மற்றும் பணிக்குழாமின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று (13) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதியும் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.