நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு (Human Rights Council) மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் புகார் அளிக்க ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே (PEMASIRI MANAGE) வெளியிட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளமை மிகவும் நியாயமற்ற முடிவு என மானகே குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியத்திற்காக காத்திருக்கும் பல வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரும் சிக்கலை எதிர்நோக்குவார்கள் என்றும் கூறினார்.
ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் ஓய்வூதியத்தை ரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக் குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்குரிய சட்டமூலம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
