தீவிரமடையும் போர் : இஸ்ரேலில் இருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) - ஈரான் (iran) இடையே போர் நீடித்துவரும் நிலையில் இஸ்ரேலில் இருந்து எகிப்து (Egypt) வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த வழியாக நாடு திரும்புவோர் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று அந்த தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக வெளியேறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
கெய்ரோ விமான நிலையம்
எனினும், நேற்று எகிப்திய எல்லையைக் கடந்து கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவருக்கு இஸ்ரேலிய விசா இல்லாத காரணத்தினால், எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர், இது தொடர்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா (Nimal Bandara) தெரிவித்தார்.
அவசரநிலையில் கூட, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது காலாவதியான விசா ஊடாக வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது என்றும், இவ்வாறு பயணிக்க முயற்சிப்பது நீண்ட விசாரணைகளுக்கும், கைதுக்கும் கூட வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம்
அதன்படி, இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது விசா காலாவதியான இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்படமாட்டார்கள், மேலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாதவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை திரும்புவதற்காக மேலும் இரு இலங்கையர்கள் நேற்று (20) ஆவணங்களைப் பெறுவதற்காக தூதரகத்திற்கு வந்ததாக தூதுவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
