அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி! மஹிந்த அமரவீர
அரசாங்கத்தை விட்டு சிறிலங்கா சுதந்திர கட்சி வெளியேறினால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு மட்டுமல்ல சாதாரண பெரும்பான்மையும் இருக்காது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பு அலையொன்று உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் மக்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிகழ்கால அரசியல் தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்திற்குள் எமக்கு அங்கீகாரம் இல்லை என்பதும் உண்மையே, எமது உறுப்பினர்களை அதிகமாக விமர்சிக்கின்றனர் என்பதும் உண்மையே, அரசியல் தீர்மானங்களில் எல்லாம் அரசாங்கம் தவறிழைத்து வருகின்றது என்ற காரணத்தினால் தான் அரசாங்கத்தில் இருந்து எம்மை வெளியேறுமாறு வலியுறுத்துகின்றனர்.
சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மை நிலைப்பாடாக அமைந்தால் அதனை ஏற்றுகொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என தெரிவித்துள்ளார்.