மக்கள் பணி தடையின்றி தொடர வேண்டும்! அதிகாரிகளை அறிவுறுத்திய ஜனாதிபதி
மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் எக்காரணிகளுக்காகவும் தடைப்பட கூடாது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என கிராமிய வீதி அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2 வருடம் தாமதமாகியுள்ளதால் அதற்காக, 4000 மில்லியனை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் நிதியை வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாதென்பதுகூட எதிர்கட்சி தலைவருக்கு புரியவில்லை.
நாம் வெளிநாடுகளுடன் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கமைய அந்தப் பணிகளை நிறுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக பணத்தை செலுத்த வேண்டி ஏற்படும். அவ்வாறு செலுத்துவதாயின் இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தையே செலுத்த வேண்டும்.
அதனால் தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகளை தாமதமின்றி முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனா தடுப்புக்காக உள்ள பணத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்துவதாகவும் அபிவிருத்திக்கான நிதியை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது என்பதையும் எதிர்தரப்பினர் அறியவில்லை.
அரசாங்கத்தால் கொள்வனவு செய்யவுள்ள ஹெலிகொப்டர் ரஷ்யா கடன்திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்யப்படவுள்ளது. இந்த ஹெலிகொப்டர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2 வருடம் தாமதமாகியுள்ளதால் அதற்காக, 4,000 மில்லியனை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுபீட்சத்தின் நோக்கு என்ற கொள்கைக்கமைய மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதுடன், நாட்டின் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.