ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டத் தயாராகும் மக்கள்!! விஜித ஹேரத் வெளிப்படை
ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் நல அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்க தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர். நாளை வேண்டுமானாலும் அவர்கள் இதனைச் செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''நாட்டில் தற்போது எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிவருகின்றன. இதற்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு துரிதம் காட்டவில்லை.
மாறாக எரிவாயு அடுப்பு வெடிப்புக்கும், எரிவாயு கொள்கலன்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
இப்படியான கருத்துகளை முன்வைத்து, தமது இயலாமையையும், பலவீனத்தையும் மறைக்க செயற்பட்டு வருகின்றனர்'' என்றார்.