நான் அச்சமடைய போவதில்லை - தைத்திருநாள் விழாவில் சஜித் பிரேமதாச சூளுரை (படங்கள்)
சிலர் இன, மத, குல பேதங்களை பயன்படுத்தி என்னை சாடினர். அதை கண்டு நான் அச்சமடைய போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மதவாதம், பிரிவினைவாதத்திற்கு மீண்டும் ஏமாற வேண்டாம். ஆகவே எமது தாய்நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா - சினோசிடா மைதானத்தில் இன்றையதினம் தைப்பொங்கல் விழா நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட அரச தலைவர் செயலணி உருவாக்கப்படும்.
நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நன்றியறிதலின் முக்கியதுவத்தை எடுத்துயம்பும் பொங்கல் நாளில் தொடர்ந்தும் உங்கள் மதவுரிமையை பாதுகாப்பேன்.
அவரவர் அடையாளத்தை பாதுகாப்பதும், ஏனைய மதத்தினரை மதிப்பதும் உயரிய மனித குணமாகும். அவ்வாறான குணவியல்பை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். எனது தந்தை பெருந்தோட்ட மக்களுக்கும் பிரஜா உரிமையை வழங்கி அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தார்.
அவரே பிரஜா உரிமை என்ற முதலாவது போராட்டத்தை தொடங்கி வெற்றிப் பெற்றார். அதேபோல் பெருந்தோட்ட மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றும் இரண்டாவது போராட்டத்திலும் பிரேமதாசவின் மகன் வெற்றி பெற்று தருவார்.
சிலர் இன, மத, குல பேதங்களை பயன்படுத்தி என்னை சாடினர். அதை கண்டு நான் அச்சமடைய போவதில்லை. எனது ஆட்சியில் இன,மத,குல மற்றும் அடிப்படைவாதம் போன்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் பொதுவானதொரு ஆட்சி நடக்கும்.
இன்று சில மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் மக்களின் துயரம் தெரிவதில்லை. ஆட்சியாளர்களுக்கும் இது தெரிவதில்லை. காரணம் அவர்கள் கையில் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பதில்லை, அவர்கள் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பதில்லை.
அவர்கள் பசளையின்றி கஷ்டப்படவில்லை. அவர்கள் அரசி, சீனி மற்றும் எண்ணெய்க்கு வரிசைகளில் எப்போதும் நிற்பதில்லை. அவர்களுக்கு ஒரு போதும் பால்மா பிரச்சினையில்லை அல்லவா? காரணம் அவர்களுக்கு அவை எல்லால் அரண்மனைக்கு கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றது.
தயவுச் செய்து விழித்துக் கொள்ளுங்கள். மதவாதம், பிரிவினைவாதத்திற்று மீண்டும் ஏமாற வேண்டாம்.
ஆகவே எமது தாய்நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவது அவசியம். இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது. இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது.
இன்று இந்தியா மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குகின்றது. இதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆகவே பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். வேறு யாருக்கும் இது முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (
Gopal Bagley) உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.