ஞானசாரதேரருக்கு கோட்டாபய வழங்கிய அனுமதிப்பத்திரம்
இனவாத, மதவாத செயற்பாடுகளை வெளிப்படையாக மேற்கொள்வதற்கு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு(Galagoda Atte Gnanasara Thera) சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரமே ஜனாதிபதி செயலணி தலைவர் பதவி என மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக சாடியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட இலங்கையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளை மூடிமறைக்க ஒரு பெரிய இனவாத செயற்பாட்டிற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த செயற்பாட்டை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பொறுப்பு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அந்தக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake)குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்குவதற்கு 2 வருடங்களின் பின்னர் ஜனாதிபதிக்கு நினைவு வந்துள்ளது என நான் நினைக்கின்றேன். இது அவருடைய பெரிய குறைபாடு. தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளார். அவர் ஒரு இனவாத, மதவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு நபர். அதே போல் நீதிமன்றத்தில் அவர் ஒரு குற்றவாளியும் கூட. அரசியல் நோக்கத்திற்காக ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றவர்.
அவர் சிறிது காலம் மஹிந்த ராஜபக்சவோடு(Mahinda Rajapaksa) இருந்தார், பின்னர் மைத்திரிபால சிறிசேனவுடன்(Maithripala Sirisena) இருந்தார், தற்போது இந்த அரசாங்கத்தோடு இருக்கின்றார். இவர் இந்த அரசியல்வாதிகளின், ஜனாதிபதிகளின் அரசியல் நோக்கங்களை, வேலைத்திட்டங்களை நிறைவேற்றும் ஒரு நபராகவே இருக்கின்றாரே தவிர, சட்டத்திற்காக, சமாதானத்திற்காக, பௌத்தத்திற்காக சேவை செய்யும் ஒருவராக தெரியவில்லை.ஆகவே அப்படியான ஒருவர் என்றுமே இவ்வாறான ஒரு பதவிக்கு தகுதியற்றவர்.
குறிப்பாக இதில் ஒரு பெண் இல்லை, எந்தவொரு தமிழ் உறுப்பினரும் இல்லை, இப்படி ஒன்றை செய்வதாக இருந்தால் சட்ட அறிஞர்கள் சிலர் கட்டாயம் அதில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை நடைமுறைப்படுத்த செய்யவில்லை, மாறாக ஞானசார தேரருக்கு பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அவருடைய அரசியல் நோக்கத்திற்காக வழங்கப்பட்ட ஒரு பதவி தான் இது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்திற்கு நிறைய எதிர்ப்புக்கள் பேராயர் மற்றும் ஏனைய மதகுருமார் இடத்தில் எழுந்துள்ளது. அதனால் தற்போது அந்த கத்தோலிக்க சமுகத்தை தாக்க விசேடமாக ஒரு இனவாத செயற்பாடு இவர்களுக்கு தேவை. கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksha) அவர்களின் ஆட்சி உடைந்து விழுந்துள்ளது. மக்கள் திட்டுகின்றார்கள். அதனால் இனவாத செயற்பாடு ஒன்று தேவைப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மூடிமறைக்க ஒரு பெரிய இனவாத செயற்பாட்டிற்கான தேவை ஏற்பட்டுள்ளது. அந்த இனவாத செயற்பாடு உத்தியோகபூர்வமாக ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று பொறுப்புக்கூறல், சிறுபான்மையினர் உரிமைகள் என அனைத்தையும் பொறுப்பேற்பதாக கூறினார். அப்படியிருக்கும் போது இப்படியான ஒரு நபரை ஜனாதிபதி செயலணியில் தலைவராக்கினால் சர்வதேசரீதியாக நாம் அவமதிப்புக்குள்ளாவோம். அதேபோல் இலங்கைக்கு எதிராக அசாதாரண முறையில் செயற்படும் சில நாடுகள் சில அமைப்புக்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.