கத்திக்குத்தில் ஒருவர் பலி! சந்தேக நபர் தலைமறைவு - தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் (படங்கள்)
கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கத்திக்குத்தினை மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவமானது நுவரெலியா - தலவாக்கலை - வட்டக்கொடை மடக்கும்புர வடக்கி மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக நேற்றுமாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதேயிடத்தைச் சேர்ந்த முருகையா சரவணன் (வயது - 31) என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார். சடலமானது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில்,
பணத் தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்தினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.













