வீடு உடைத்து திருட்டு - காவல்துறை விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்
உதவ வந்தவர் திருடனாக கண்டுபிடிப்பு
கண்டி ராஜ வீதியில் வீடு புகுந்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகளுக்கு உதவியாக இருந்த ஒருவரே திருடனாக கணடறியப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கண்டி நகரம் ராஜா வீதியிலுள்ள வீடொன்றை மூடி அதன் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு ஏழு பவுண் தங்கம் மற்றும் இரு இலட்சம் ரூபா வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.
முறைப்பாட்டின் பிரகாரம் செயற்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது அருகில் உள்ள கடையொன்றில் பணிபுரியும் நபர் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு உதவுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்துள்ளார்.
காட்டிக் கொடுத்த காலணித் தடம்
வீட்டில் இருந்த ஓடுகளில் காலணி தடம் பதிந்திருப்பதில் கவனத்தை செலுத்திய காவல்துறை அதிகாரிகள் அதை கவனிக்க ஆரம்பித்தனர். மழை பெய்த நாள் என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்கு உதவி செய்ய முன்வந்தவர் திரும்பிய போது, ஓடுகளில் பதிந்திருந்த கால்தடங்கள், உதவ வந்தவரின் காலடித் தடம் போல் தெரிந்ததால், சம்பந்தப்பட்டவரிடம் விசாரிக்கத் தொடங்கினர்.
அதன் பின்னரே இந்த திருட்டின் வேர் தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர், அருகில் உள்ள கடையில் வேலை பார்த்து விட்டு, இரவில் திரும்பி வந்து கதவை உடைத்து பொருட்களை திருடிச் சென்றதாக காவல்துறைனரிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தலைமை ஆய்வாளர் எம்.ஜி.எஸ். பண்டார தெரிவித்தார். அவர் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
