எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை
பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணையை லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மெண்டல்சன் பற்றிய தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இதில், 2008 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது பிரித்தானிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவிருந்த மிக முக்கியமான நிதிசார் முடிவுகளை மெண்டல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் எப்ஸ்டீன் மூலம் மெண்டல்சனுக்கு மூன்று தடவைகளில் மொத்தம் 75,000 டொலர்கள் வழங்கப்பட்டதாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தோடு, 2009 இல் மெண்டல்சனின் துணைவருக்கு எப்ஸ்டீன் 10,000 பவுண்டுகளை அனுப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிரபுக்கள் சபை
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பிரபுக்கள் சபையிலிருந்து இன்று (04-02-2026) தான் விலகப்போவதாக மெண்டல்சன் அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் கடந்த ஆண்டு அமெரிக்க தூதுவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மெண்டல்சன் தனது நாட்டைத் தற்காப்பதில் தவறிவிட்டார் என்றும் மற்றும் அவரது செயல் அருவருப்பானது என்றும் பிரதமர் சாடியுள்ளார்.
மேலும், மெண்டல்சனின் பிரபு (Lord) பட்டத்தைப் பறிப்பதற்கான புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |