உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான போரின் விளைவுகள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெட்ரோல் விலைகள் குறைய வாய்ப்பின்றி உயர்மட்டத்திலேயே இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழல்
தற்போதைய சூழலில் ஒரு கேலன் பெட்ரோல் விலை மூன்று டொலருக்கும் அதிகமாக அடுத்த ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய சராசரி பெட்ரோல் விலை தற்போது ஒரு கேலனுக்கு 4.05 டொலராக உள்ள நிலையில் இது கடந்த ஆண்டை விட மிக அதிகமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெட்ரோல் விலைகள் தற்போது அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டதாகக் கருதும் அமைச்சர், இனி வரும் காலங்களில் விலைகள் மெதுவாகக் குறையத் தொடங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உறுதியற்ற நிலை
எவ்வாறாயினும், ஒரு கேலன் பெட்ரோல் விலை மூன்று டொலருக்கும் கீழ் குறையும் சூழல் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில் நிலையான சரிவு ஏற்பட வேண்டுமானால், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வருவது மிக அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தேக்கம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே வைத்துள்ளது.
இந்தநிலையில், பிராந்தியத்தில் நிலவும் இந்த உறுதியற்ற நிலை, அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், போரை முடிவுக்குக் கொண்டு வருவதே எரிசக்திச் சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |