பேச்சு வார்த்தைக்கு இடமில்லை....! அமெரிக்காவின் அழைப்பைத் தூக்கி எறிந்த ஈரான்
இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவிருப்பதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்ட இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான இர்னா (IRNA) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், வாஷிங்டனின் எதார்த்தத்திற்குப் புறம்பான அதிகப்படியான கோரிக்கைகள் மற்றும் அடிக்கடி மாறி வரும் அமெரிக்க அதிகாரிகளின் நிலைப்பாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை முற்றுகை
குறிப்பாக, ஈரான் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா இன்னும் விலக்காதது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நேரடி மீறல் என்று தெஹ்ரான் கடுமையாகச் சாடியுள்ளது.
நாளை பேச்சுவார்த்தை நடைபெறப்போவதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ள ஈரான், இது ஈரானை சர்வதேச அளவில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக அமெரிக்கா திட்டமிட்டு நடத்தும் ஒரு ஊடக நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான பேச்சுகள் மற்றும் பழிபோடும் விளையாட்டு ஆகியவற்றால் பேச்சுவார்த்தைக்கான சூழல் கனிவதற்குப் பதில், மேலும் சிக்கலாகி வருவதாகவும் ஈரானியத் தரப்பு தெரிவித்துள்ளது.
முற்றுகையை அகற்றாமல் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதில் எவ்விதப் பயனும் இல்லை என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |