கருணா தொடர்பில் மௌனம் கலைத்த பிள்ளையான்
முதலில் அத்திவாரமிட்டவர் கருணாதான்
விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிவதற்கு முதலில் அத்திவாரமிட்டவரே கருணாதான் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் காலம் கடந்து அவர் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கிழக்கு மாகாணம் பிரிவதற்கு முதலில் அத்திவாரமிட்டவர் கருணாதான். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கிழக்கு மாகாணம் வெளியேறுகின்றது என்று இயக்கம் அறிவிக்கும் போது நான் குருநாகலில் இருந்தேன். அதன் பின்னர் கருணாவோடு ஒன்றாகச் சேர்ந்து அரசியல் செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே நான் வெளியேறினேன்.
அவரைப் பற்றி நான் விமர்சிப்பது கிடையாது, ஆனால் கருணா என்னைப் பற்றி விமர்சித்திருக்கின்றார். நாங்கள் கடுமையான அழுத்தத்தினால் அரசியலுக்கு வந்தவர்கள், கடந்த காலங்களில், வரலாற்றிலே தோற்றவற்றை எல்லாம் அரசியல் மூலமாக சாதிக்க வேண்டும் என்ற இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டியவர்களாக நாங்கள் இருந்தோம்.
கருத்து ரீதியான முரண்பாடு
அந்தக் கட்டமைப்பை சிதைக்கின்ற அளவில் தீர்மானங்களும் முடிவுகளும் இருக்கக் கூடாது என்ற விடயத்தில் கருத்து ரீதியான முரண்பாடு இருந்தது. அந்த முரண்பாட்டின் இறுதியில் நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோடு தனியாளாக இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கருணாவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் அரசியலில் பெரிதாக ஈடுபடுவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)