பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!
தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் இருந்து மிக முக்கியத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட அறிவிப்பு உண்மைக்குப் புறம்பானது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “பிள்ளையான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.
உத்தியோகபூர்வ ஆவணங்கள்
எனினும், ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அந்தத் தகவல்கள் இல்லை, அவை மாயமாகியுள்ளன.
பிள்ளையான் கூறியதாகச் சொல்லப்படும் தகவல்களை அந்த அறிக்கை உறுதிப்படுத்தவில்லை.

குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த B அறிக்கையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை.
மட்டக்களப்புச் சிறையில் இருந்தபோது சஹ்ரான் ஹாஷிமின் குழுவினருக்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதாக அசாத் மௌலானா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களில் இத்தகைய தகவல்கள் ஏன் இடம்பெறவில்லை ? அரசியல் இலாபங்களுக்காகக் கூறப்பட்ட இத்தகைய கருத்துக்கள், உண்மைக்கு அப்பாற்பட்டவை என்பது இப்போது நீதிமன்ற அறிக்கைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |