பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணை இன்று (02) நிறைவடைந்துள்ளது.
வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 08.04. 2025 அன்று கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்சியின் அலுவலகத்தில் வைத்து வெளிப்படுத்தப்படாத காரணங்களுடன் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக அரசியலமைப்பின் பிரிவுகள் 12(1) இன் படி சட்டத்தின் முன் சமமற்ற முறையில் நடத்துதல், 12(2) இன் படி அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாடு), 13(1) இன் படி காரணமின்றி கைது மற்றும் 13(2) இன் படி சட்டத்தின் சரியான செயல்முறை இல்லாமல் கைது ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |